ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது! - ஜனாதிபதி
ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு நபர்கள் முயற்சித்து வந்தாலும் ராஜபக்ச குடும்பம் என்பது அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய குடும்பம் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ச என்பவர், எமது நாட்டில் மாத்திரமல்ல, நான் நினைக்கின்றேன் முழு ஆசியாவை எடுத்துக் கொண்டால், சிரேஷ்ட தலைவர் என்பது எமக்கு தெரியும். அவர் அரசியல் அனுபவமிக்கவர்.
அவரது தலைமைத்துவத்திடம் எந்த தலைவரும் நெருங்க முடியாது. இப்படியான தலைவர் கட்சிக்கு தலைமை தாங்கும் போது நாட்டை முன்னெடுத்துச் செல்ல எனக்கு மிகப் பெரியது உதவியாக இருக்கின்றது.
எமது வெற்றியில் பிரதான சாதகம் மகிந்த ராஜபக்ச என்ற கதாபாத்திரம். அத்துடன் பசில் ராஜபக்ச கட்சியை உருவாக்கி, அரசாங்கத்தை ஏற்படுத்தவும் வெற்றியை பெறும் சூழ்நிலையை நாட்டில் உருவாக்கினார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படியான இரண்டு தலைவர்களுடன் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல எனக்கு மிகவும் இலகுவாக இருக்கின்றது. இவர்கள் இருவருடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளேன். இது அப்படியே நடக்கும்.
மகிந்த ராஜபக்ச எந்தளவுக்கு அரசியல் ரீதியான முதிர்ச்சியை கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த நியமனங்களின் போது, செயல்களின் போது எனக்கு அவர் எந்த அழுத்தங்களை கொடுத்ததில்லை.
கோட்டாபய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என அவர் சிலரிடம் பல முறை கூறியுள்ளார். அதேபோல் பசில் ராஜபக்ச எனக்கு எந்த சந்தர்ப்பதிலும் அழுத்தங்களை கொடுத்ததில்லை.
60 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடும் தலைவர் என்பதால், அவருடன் பலர் இணைந்திருப்பார்கள். விஜேராம வீட்டில் ஒரு கதவை திறக்க முடியாது. காலையிலேயே மக்கள் குவிந்து இருப்பார்கள்.
மகிந்த ராஜபக்ச பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வருவபவர் என்பதே இதற்கு காரணம். பலர் அவரை அறிவார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் அவரை சந்திக்க வருகின்றனர். இதனால், அவரது சிரமங்களையும் நான் நன்கு அறிவேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் நெருக்கடிகள் இன்றி நாட்டை முன்னெடுத்துச் செல்வேன் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். பலர் எமது குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
எமது குடும்பம் அப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய குடும்ப அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.