கந்தளாயில் கஞ்சா தோட்டம் முற்றுகை - சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினரால் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(11.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா தோட்டம் தீயிட்டு அழிப்பு
கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் பி. செனவிரத்னவின் நேரடி வழிகாட்டலின் கீழ், கந்தளாய் பிரிவு ஊழல் தடுப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தோட்டத்தில் இருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரைக் கண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 18,750 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதுடன், அவை சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் தீயிட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
