புற்றுநோய் தடுப்பூசிகள் தேக்கம் - அரச நிறுவனங்களின் அலட்சியத்தால் தாறுமாறாக உயரும் விலை
சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 புற்றுநோய் தடுப்பூசிகள் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாகவே, குறித்த 1,60,000 அளவிலான புற்றுநோய் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் களஞ்சியங்களில் தேங்கியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கள்ளச் சந்தையில் 25,000 ரூபாய்க்கு விற்பனை
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்புப் பிழையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என்று குறித்த மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

புற்றுநோய் தடுப்பூசி அடங்கிய பெட்டியில் தேவையான அனைத்து தகவல்களும், சிலிண்டரின் முன்புறத்தில் உள்ள சரியான விலைச்சீட்டிலும், அதாவது உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி திகதி மற்றும் பொருளின் தரம் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், சிலிண்டரின் பின்புறத்தில் உள்ள விலைச்சீட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாக, மருத்துவ விநியோகப் பிரிவு இந்த இருப்பை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
சுமார் 900 ரூபா விலையுள்ள இந்தத் தடுப்பூசி, தற்போது கள்ளச் சந்தையில் 25,000 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த விலையில் கூட இதனைக் கொள்வனவு செய்வது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.