தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அமைதியான நாட்டிற்கு தகுதியானவர்கள் - கனடா பிரதமர்
தமிழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் பாதுகாப்பான, அமைதியான, நிலையான நாடு ஒன்றிற்கு தகுதியானவர்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்த துயரத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாகக் கனடா பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவதை அனுஷ்டிக்கும் இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட, 26 வருடகால ஆயுதப் போரின் போது, உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அத்துடன், வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் பாதுகாப்பான, அமைதியான, நிலையான நாடு ஒன்றிற்கு தகுதியானவர்கள் என அவர் வலியுத்தியுள்ளார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள், நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தற்போதைய அவசியத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கிறது.
மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செயற்படும் அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றது” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.