தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..!
இன்று ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனையை கையாளும் பிரதான அரசியல் கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி தலைமைத்துவப் போட்டிகளினாலும், அரச ஒத்தடித்தனங்களாலும் சீரழிந்து சின்னா பின்னப்பட்டு போயிருக்கிறது.
இந்நிலையில் சுயநிர்ணய அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை நோக்கிய அரசியல் வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்கு யாரும் தகுதியற்ற நிலை தோன்றியிருக்கிறது.
காலத்துக்கு காலம் மாறிவரும் அரசியல்
இந்த சூழலில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்கு முதலாவதாக தமிழ்த்தேசியம் மீள்கட்டுமானம் செய்யப்பட வேண்டிய கட்டாய நிலை தோன்றியிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்த்தேசியம் சார்ந்தும், கட்சிகள் சார்ந்தும், நடைமுறை சார்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்வதும், அதற்கான சரியான கருத்து உருவாக்கத்தை மேற்கொள்வதும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
வரலாற்றுத் தொன்மையும், மொழியியல் வளர்ச்சியும் மிக்க தமிழ் மொழி பேசும் மக்கள் கூட்டம் தனக்கான தனியரசை கொண்டிக்காவிட்டாலும், தமிழ் சமூகத்தை காக்கவல்ல அரசியல், சமூகவியல் கட்டமைப்புகளையும் இப்போது இழந்து நிற்கிறது.

காலத்துக்கு காலம் மாறிவரும் அரசியல் சூழமைகளுக்கு ஏற்ப தம்மை புதுப்பிப்பதற்கான வழி தெரியாமல் தமிழ் சமூகம் சீரழிந்து கிடக்கிறது.
ஈழத்தமிழ்த் தேசியம் இப்போது பெருமளவு சீரழிந்து அழிவுப் பாதையை நோக்கி மெல்ல நகர்ந்து செல்கிறது. இத்தருணத்தில் தமிழ்த் தேசியத்தை தக்கவைத்து, தமிழ் சமூகத்தையும், அதன் அரசியலையும் பாதுகாக்க வல்லவர் யாரோ? என்பதே இப்போது தமிழ் மக்களிடம் உள்ள கேள்வியாக உள்ளது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே“. இந்தச் சொற்றொடர் தமிழ் மொழியின் தொன்னமிகு நூலான நன்னூலில் 462வது சூத்திரத்தில் பவணந்தி முனிவரால் கூறப்படுகிறது.
இதன் பொருள் யாதெனில் காலத்தின் மாற்றத்தால் பழைய சொற்கள், வழக்கங்கள், மரபுகள் மறைந்து காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் சூழலுக்கு பொருத்தமான புதியவை புகுந்தாலும் தவறானது அல்ல என்பதாகும்.
ஈழத்தமிழ் அரசியல்
இது எல்லா காலத்துக்கும், எல்லா தேவைகளுக்கும், எல்லா சூழல்களுக்கும் பொருத்தமான ஒரு அறிவுரை. இதனையே உயிரியல் விஞ்ஞானத்தில் டார்வின் பரிணாமவாத கோட்பாடு "இயற்கை தேர்வு, தக்கன பிழைக்கும்" என்கிறார் அதனை அரசியல் தத்துவத்தில் "எதை மாற்ற முடியுமோ அதில் தொழிற்படு, எதனை மாற்ற முடியாதோ அதை புரிந்து கொள்" எனச் சொல்லப்படுகிறது.
அரசியல் என்பது மனிதனுடைய தேவைக்கும், வாழ்விக்கும் நிலையான நீண்டகால இருப்பிக்குமானது. எனவே உயிரியோ, இனமோ, சமூகமோ, நாடோ காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை மாற்றி அமைத்து "தகவமைக்க" வேண்டும் என்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

இந்த வரலாற்று, தத்துவார்த்த புறநிலை எதார்த்தத்தை ஈழத்தமிழ் அரசியல் பரப்புக்கு பிரதியீடு செய்வதும், தமிழ் தேசியம் என்கின்ற தமிழ் மக்களின் ஒன்று திரண்ட அபிலாசையை வெளிப்படுத்துவதற்கான நடைமுறைகளில் பிரயோகித்து தமிழ் மக்களை அரசியல் ரீதியாக மீள் தேசிய கட்டுமானத்திற்கு நகர்த்திச் செல்வதற்கும் அவசியமாகிறது.
இப்போது தமிழ் மக்களுடைய தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அது பின்னோக்கிச் சென்று எதிர் புரட்சிகர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதாவது தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிலிருந்து இன்னும் பின்னோக்கிச் சென்று இருக்கிறது என்பதே உண்மையான களயதார்தமாகும்.
இந்நிலையில் தமிழ் தேசிய கட்டுமானத்தை மீள்கட்டுமானம் செய்வது என்பது இப்போது இருக்கின்ற சீழ்பிடித்துப் போய்யுள்ள, புற்று நோய்க்கு உள்ளாகி இருக்கின்ற ஏதேனும் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியை வைத்துக்கொண்டு மீள் தேசியக் கட்டுமானத்தை நிச்சயம் மேற்கொள்ள முடியாது.
ஆகவே இங்கே கட்சிகளுக்கிடையே ஒரு அறுவைச்சிகிச்சை இன்றியமையாததாக உள்ளது. அந்த அறுவை சிகிச்சை என்பது காலவதியாகிய தலைவர்களை ஓய்வுக்க அனுப்பி கழித்து விடுவதும், புதிய தலைமைகளை உள்வாங்குவதும், செயற்திரன் மிக்கவர்களை களத்துக்கு கொண்டு வருவதும், களங்கப்பட்டவர்களை வெளியேற்றுவதுமாக அமைந்தால் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு மீள் தேசிய கட்டுமானத்தை மேற்கொள்ள முடியும்.
தமிழரசு கட்சி
இதனைத் தமிழ் மக்கள் நமது தேசிய அபிலாசைகளுக்கான பொது எதிரிகளான பௌத்த சிங்கள தேசிய அரசியல் கட்சிகளிடம் இருந்தாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
அரசியலில் காலத்தின் தேவைக்கு ஏற்றவற்றை, கற்க வேண்டியவற்றை நாம் கற்காமல் சீரழிந்து கொண்டிருக்கும் போது பல விடயங்கள் எதிர்மறை ஆசனிடம் இருந்து கற்க வேண்டியுள்ளது.
எதிர்மறை ஆசான்கள் முள்ளிவாய்க்காலில் எமக்கு நிறையவே கற்றுத் தந்தும் இருக்கிறார்கள். அதனை மனதில் கொண்டு எதிர்கால அரசியலை துணிவுடனும், திடசங்கர்ப்பத்துடனும் எதிர்கொள்ள தமிழினம் தயாராக வேண்டும். அரசியலில் புனிதமோ, தூய்மையோ, நியாயதர்மங்களோ, செல்லுபடியேற்றவை. அவை வேண்டுமானால் இலக்கியங்களுக்கும், விருப்பு வாதங்களுக்கும், கற்பனை உலகிற்கும் ரம்யமானதாக இருக்கலாம்.

நடைமுறையில் அவரவர் நலன்களே முதன்மையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது சிங்கள தேசியக் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலை பற்றியும் ஒரு ஒப்பீட்டை செய்து பார்ப்பது அவசியமாக உள்ளது.
சிங்கள தேசத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி இல்லாத போய்விட்டது. 1943இல் தொடங்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை விழுங்கி தோன்றிய மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற ஜேவிபி யும் அதாவது இடதுசாரிக் கட்சிகள் இல்லாதொழிந்து அவற்றின் எச்சசொச்சங்கள் ஒன்றாகி இப்போது எம்.பி.பி என்ற புதியகட்சியாக புதுப்பொலிவுடன் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியும் விட்டார்கள். இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற நிலைமையை எப்படி இந்த இடதுசாரிகளால் மாற்றியமைக்க முடிந்தது? அவர்கள் மாற்றத்திற்கு உட்பட்டார்கள் வெற்றிபெற்றார்கள்.
மாற்றம் என்பதே தமிழர்களுக்கான கற்கப்படவேண்டிய பாடமாக உள்ளது. 1951ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களத்தில் இல்லாமல் போய் அதனை விழுங்கி பொதுஜன பெரமுன என்ற கட்சியாக வளர்ச்சி அடைந்துவிட்டது.
1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத போய் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியாக வளர்ச்சியடைந்து புதிப் புதுப்பொலிவுடன் இன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளது.
சிங்கள தேசத்தில் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் அரசியல் கட்சிகள் தம்மை மாற்றியமைத்து புதுப்பொலிவுடன் விளங்குவதை இப்போதாவது தமிழ் கட்சிகளின் கண்களுக்கு தெரிகிறதா? தமிழர் தரப்பில் 1944ல் தோன்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், 1949ல் தொடக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியும் இப்போது வண்டில் சில்லில் அகப்பட்டு நசிபட்ட அட்டை போல எந்தப் பக்கமும் நகரமும் முடியாமல், மரணிக்கவும் முடியாமல், தமிழ் மக்களின் அரசியலை முன் கொண்டு செல்லவும் முடியாமல் தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை சிதைவுக்கு உள்ளாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அதேபோலவே ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக அரசியலுக்கு வந்த அனைவரும் அங்கும் இங்குமாக கட்சிகள் தாவி எங்குமே நிலை பெற முடியாமல் சீரழிந்து போய் உள்ளனர்.
தமிழர் அரசியல் வரலாறு
1970ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிரதான தமிழ் கட்சிகளின் செயலாளர் தம்மை நிலைப்படுத்துவதற்கும் நாடாளுமன்ற கதிரையை பெறுவதற்கும் ஒரு கூட்டு கட்சிக்கு சென்றார்கள்.
அந்த தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு கட்சிகளின் ஒன்றிணைவால் 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஒரு மக்கள் ஆணையை பெற முடிந்தது. ஆயினும் அங்கும் உடைவுகள் ஏற்பட்டு கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு சிறிய பகுதியினர் மீண்டும் சைக்கிள் சின்னத்துடன் நிற்க ஏனையவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நின்று சங்கமித்துக் கொண்டார்கள்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபைக்கு சென்றதன் மூலம் தமக்குத் தாமே கழுத்தில் சுருக்கயிற்றை மாட்டிக் கொண்டார்கள்.

தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தின் விளைவால் தமிழ அரசியல் பரப்பில் உள்ள இரண்டு கட்சிகளும் பெயரளவில் இருந்தனவே தவிர அவை செயற்பாட்டில் இல்லாமல் போய்விட்டனர். 2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழர் அரசியல் வரலாற்றில் அதிகூடிய 22 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்ற கட்சியாக பதிவாகியது.
ஆயினும் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து நான்கு துண்டுகளாக பிரிந்து. இவற்றில் தமிழரசி கட்சி ஒப்பிட்டு அளவில் பெரிய கட்சியாக பிரதான பாத்திரத்தை வகிக்க தொடங்கினர்.
ஆயினும் கடந்த இரண்டு வருடங்களாக கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டு கட்சி ஜனநாயக முறை முறைமைகளில் இருந்து நழுவி சர்வதிகாரப் போக்குக்கு சென்று விட்டது.
கட்சியின் மரபுகளை மீறி அங்கு சட்டப் பயங்கரவாதம் கோலோச்சத் தொடங்கிவிட்டது. இப்போது தமிழ் பரப்பு உள்ள அரசியல் கட்சிகள் உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகிய கதையாய் சீரழிந்து கிடக்கிறது.
தமிழரசுக் கட்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க விடாது கட்சிக்குள் இருந்தே நீதிமன்ற வழக்குக்குச் சென்று இரண்டு வருடமாக தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
அரசிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தர போராடவேண்டியவர்கள் இப்போது தமது கட்சியின் உள்வீட்டு பிரச்சினைக்கு அந்த அரசையே பஞ்சாயத்துக்கு அழைக்கவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. எதனை இலங்கை அரசும் விரும்புகிறதோ அதனையே தமிழரசு கட்சியும் செய்கிறது. தமிழரசு கட்சிக்குள் குழுவாதங்கள் முதன்மைபெறத் தொடங்கிவிட்டன.
நெருக்கடியான நிலை
சி.சிறீதரன் அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவுசெய்து அனுப்பப்படும்போது அவருக்கு வழங்கப்பட்ட அந்த பொறுப்பானது அவருக்கான பொறியாகவே அமைந்திருந்தது.
அரசியலமைப்பு குழுவில் பேசப்படுகின்ற விடயங்களில் அளிக்கப்படுகின்ற விருப்பு வாக்கு பற்றி குழுவில் அங்கத்தவர் ஒருவர் தான் யாருக்கு வாக்களித்தேன் என்றோ, அல்லது வாக்களிக்கவில்லை என்றோ வெளியில் கூறுவது சட்டவிரோதமானதும்.
அரசியலமைப்புக் குழு ஒழுக்கவிதிகளுக்கு மாறானதுமாகும். அந்த அடிப்படையில் அரசியலமைப்பு குழுவில் ராணுவத்தினருக்கு ஆதரவாக சிறீதரன் வாக்களித்தார் என தமிழரசு கட்சி கூறும் குற்றச்சாட்டை சிறீதரன் மறுக்கவும் முடியாது, ஒப்புக் கொள்ளவும் முடியாது. இரண்டில் எதைச் செய்தாலும் அவர் அரசியலமைப்புக் குழுவில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்த ஒரு நெருக்கடியான நிலையை பயன்படுத்தி தமிழரசு கட்சி அவர் மீது குற்றம் சுமத்தி அவரை தமது நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி நிர்பந்தித்து அவர் விலகாதபோத தமிழரசுக்கட்சியின் அரசியல் அமைப்பு குழுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கி மீண்டும் கட்சிக்குள் சட்டப் பயங்கரவாத தாக்குதலை செய்துள்ளனர்.
ஆதலால் தமிழர்களுக்கு தலைமைதாங்கும் தகுதியை தமிழரசுக்கட்சி இழந்துவிட்டது.
அதேபோலவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் முரண்கள் தோன்றி விட்டன. ஒரு தேசம் இரு நாடு என்ற நிலையிலிருந்து 13ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மாகாணசபை முறைமைக்கு எதிராக சவப்பெட்டி ஊர்வலம் சென்றவர்கள், இப்போது ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்து இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசின் அனுசரணையை கட்சி நாடியபோது கட்சிக்குள் தீவிர போக்குடையவர்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவுக்கு எதிராக கூக்குரலிடத் தொடங்கிவிட்டனர்.
ஆகவே தமிழ அரசியல் பரப்பில் தமிழர்களுடைய இலட்சியம் சார்ந்தும், அந்த இலட்சியத்திற்கான மூலபாயம் சார்ந்தும் கட்சிகள் தமது தொண்டர்களுக்கு சரியான அரசறிவை அல்லது விளக்கங்களை கொடுக்கவில்லை என்பது இங்கே புலனாகிறது.
அது மட்டுமல்ல கட்சிகள் தமது நலன்களுக்காக அரசியல் எதார்த்தத்தையும், அரசியல் நடைமுறைகளையும், கோட்பாடுகளையும், தவறாக சித்தரித்தும், தமக்கு ஏற்றவாறு பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டும் தொண்டர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து மண்டலத்தை உருவாக்கி வைத்து விட்டனர்.
இந்த தவறான கருத்து மண்டலம் உருவாக்கம் ஆயுதப் போராட்ட அனைத்து இயக்கங்களினாலும், அனைத்து மிதவாத அரசியல் கட்சிகளினாலும் உருவாக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.
கருத்து மண்டல மாயை
இந்த தவறான கருத்து மண்டல உருவாக்கத்திற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. தம்மை அந்தந்த காலத்தில் தக்க வைப்பதற்காக அவரவர் சொன்ன பொய்களும், புரட்டுக்களும், கட்டுக்கதைகளும் இப்போது உண்மையான சம்பவங்களாகவும், உண்மையான கருத்தியலாகவும் மாற்றமடைந்து தமிழ் மக்களை ஒரு திரிசங்கு நிலையில் மீளமுடியாத தவறானதும், பொய்யான கருத்து மண்டல மாயைக்குள் கொண்டு வந்து அமிழ்த்தி இருக்கிறது.
இத்தகைய அபயகரமான, தவறான, பொய்யான கருத்து மண்டலத்தை உடைத்தெறிவதும், புதிய கருத்து மண்டல உருவாக்கத்தை ஏற்படுத்துவதும் இலகுவான காரியம் அல்ல. எஸ்.ஜே.வி செல்வநாயகத்தை ““தந்தை செல்வா““ என்பதும் அவர் “விட்டுக் கொடுக்கப்பட்ட தலைவர்“ என்றும் இப்போது கூறுவது மிக அபத்தமானதும், அயோக்கியத்தனமானதும், உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.
கட்சியின் இலட்சியமான சமஸ்டியை கைவிட்டவர், தமிழர் தாயகத்தை 26-07-1957ல் பண்டாரநாயக்கவுடன் 3 துண்டாகவும் , பின்னர் 24-03-1965ல் 7 துண்டாக பிரிக்க டட்லி சேனநாயக்கவுடன் ஒத்துப்போன செல்வநாயகத்தை “தந்தை“ என்று எப்படி அழைக்கமுடியும்? அவ்வாறு அழைப்பதற்கான எந்த தகுதிநிலையிலும் அவர் இல்லை என்ற உண்மை தெரிந்தபின் சூடு சொரணையுள்ள தமிழன் எப்படி தந்தை செல்வா என்று அழைப்பானா?. எந்தத் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு எதனையுமே பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே இறுதியிலும் இறுதியான உண்மையாகும்.

இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானது பரிநிர்வாணமான உண்மையேயன்றி தனிநபர் புகழ்பாடல்கள் அல்ல. “உள்ளதில் இருந்துதான் உள்ளது தோன்றும் இல்லாததில் இருந்து உள்ளது தோன்றாது“ என்ற தத்துவார்த்தத்தில் இருந்து எம்மிடம் என்ன இருக்கிறதோ அதிலிருந்துதான் நாம் எதனையும் செய்ய முடியும். எம்மிடம் இல்லாத ஒன்றிலிருந்து எதனையும் படைத்திட முடியாது.
ஆகவே தமிழ் மக்களிடம் உள்ள பொருள் என்ன என்பதை முதலில் நாம் இனம் காணவேண்டும். இப்போது தமிழ் மக்களிடம் உள்ளது மக்களும், நிலமும் மட்டுமே. ஆகவே இந்த நிலத்தையும், மக்களையும் பாதுகாப்பதன் மூலமே ஒரு தேசியக் கட்டுமானத்தை முன்கொண்டு செல்ல முடியும்.
ஆனால் இப்போது தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளும் தமிழ் மக்களையும், தமிழர் தாயகத்தையும் காப்பதற்கான எந்த ஒரு மூலோபாயத்தையும், அல்லது ஒரு அரசியல் வேலை திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
அரசற்ற தமிழ்த் தேசிய இனம் சர்வதேச ஆதரவை பெறுவதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை. இவற்றை உருவாக்காமல் ஒரு தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை ஈழத் தமிழர்களால் ஒருபோதும் செய்ய முடியாது. இந்நிலையில் பிரதான கட்சியான தமிழரசு கட்சி தனது கட்சிக்குள் இருக்கின்ற குடும்மிச் சண்டைகளினால் அது சட்டப் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடுகிறது.
இது ஏனைய கட்சிகளுக்கும் தவறான ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானது அனைத்து வகையிலும் ஐக்கியமே. ஐக்கியமே தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவல்லது.
ஆகவே “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல….“ என்பதற்கு இணங்க தேவையானவற்றை இணைத்தும், தேவையில்லாதவற்றை அகற்றியும், புதியனவற்றை உட்பகுத்தியும், தமிழ் அரசியலை ஒரு பலம் மிக்க ஐக்கியமான கூட்டணிக்கு செல்ல வேண்டும்.
இங்கே கட்சிகளும், சின்னங்களும் முக்கியமல்ல. தமிழ் மக்களின் இருப்பும், பாதுகாப்புமே முக்கியம் என்ற என்ற கொள்கைப்பற்றும், நன்மனதும் மனதில் இருந்தால் மாத்திரமே கட்சிபேதங்களைக் கடந்து, தலைமைத்துவ அதிகார ஆசைகளைக் கடந்து, தமிழ் மக்களுக்கான ஒரு தேசியக் கட்டுமானத்தை இன்று இருக்கின்ற தமிழ் தலைமைகளினால் கட்ட முடியும். அவ்வாறு ஒரு தமிழ் தேசியக் கட்டுமானத்தை கட்டும்படி வரலாறு தமிழ் மக்களுக்கு கட்டளையிடுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam