‘கலிப்சோ’ தொடருந்து சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
"கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவை இன்றையதினம்(08) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து சேவை, நானு ஓயா மற்றும் தெமோதரை ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, காலை 8:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து இந்த தொடருந்து பயணிக்க உள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து இந்த தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நானுஓயாவிலிருந்து தெமோதர நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10.000 ரூபாய் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் தொடருந்து பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.
மேலும் உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த தொடருந்து சேவை கொண்டுள்ளது.
தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த தொடருந்து சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதர வரை இயங்கும் தொடருந்து மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும், இதேபோல் விரைவில் மேலதிகமாக "கலிப்சோ" தொடருந்தினை சேவையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த தொடருந்து பயணித்த தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.
