மகிந்தவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நம்பிக்கையில்லா தீர்மானம்:அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான நகர்வு
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் பதவியில் இருந்து விலகவில்லை என்றால், நாளைய தினம் அரசாங்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனை ஒன்றில் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், நாளைய தினம் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அணி மற்றும் அரசாங்கத்திற்குள் சுயாதீனமாக செயற்படும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கையெழுத்துக்கள் பெறப்பட்ட பின்னர், பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையை புதன் கிழமை சபாநாயகரிடம் கையளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில், நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானது என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள் இந்த யோசனை தொடர்பாக எப்படியான தீர்மானத்தை எடுப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் பேசப்படுகிறது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.