அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை
இலங்கையில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கனடா எச்சரித்துள்ள நிலையில், மக்கள் இயலுமானவரையில் முன்கூட்டியே பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைத்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை,நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய புதியதொரு ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகுமாறும் அவர் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாது. பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குத் தற்போது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.
இந்நிலை தொடருமானால், எதிர்வரும் மார்ச் மாதமளவில் அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிப்படைவார்கள்.
வரலாற்றைப் பொறுத்தமட்டில் எமது நாடு விவசாயத்தில் தன்னிறைவடைந்திருந்ததன் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் பசியோடு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள்.
ஆனால் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கையில் எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் தேவையான பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே எமது நாட்டின் பிரஜைகளும் இயலுமானவரையில் பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்து சேமித்து வைக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.