பலத்த பாதுகாப்பில் பஸ் லலித்! 72 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்க நடவடிக்கை
புதிய இணைப்பு
டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த லலித் கண்ணங்கர என்ற "பஸ் லலித்", 72 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இவர் டுபாயில் கைது செய்யப்பட்டு, இன்று காலை (25) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழு சமீபத்தில் டுபாய்க்கு புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.

தற்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிடியாணை உத்தரவு
சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.