மொட்டு கட்சி எம்.பிக்கள் அழுத்தம்: பறிபோகின்றது பீரிஸின் பதவி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக மொட்டு கட்சியின் விசேட கூட்டம் விரைவில் இடம்பெறவுள்ளது என அந்த கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தீர்மானித்திருந்தது.
பீரிஸின் சுயாதீனமான செயற்பாடு
கட்சியின் பொது செயலாளரால் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், கட்சியின் தவிசாளரான ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகபெருமவுக்கு ஆதரவு வழங்கி, அவரின் பெயரை வழிமொழிந்துள்ளார்.
மேலும், அவர் தற்போது டலஸ் அணியில் முக்கிய நபராக திகழ்கின்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 16 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு டலஸ் அழகபெரும தலைமையில், சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றது.
கட்சியின் தீர்மானம்
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பீரிஸிடமிருந்து தவிசாளர் பதவியை பறிக்குமாறு, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டலஸ் அணியில்
செயற்படும் உறுப்பினர்களிடமிருந்து மொட்டு கட்சியின் தொகுதி அமைப்பாளர்
பதவியும் பறிக்கப்படவுள்ளது.