சுகாதார விதிமுறையை மீறி குருந்தூர் மலையில் இராணுவ பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல்! ரவிகரன் குற்றச்சாட்டு

Covid-19 Army People Mullaitivu district
By Vanniyan May 12, 2021 06:19 PM GMT
Report

"தமிழர்களின் பூர்வீக இடமான முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் கோவிட் சுகாதார நடைமுறைகளை மீறி இராணுவப் பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல் செயற்பாடு தீவிரமாக இடம்பெறுகின்றது. சுகாதார நடைமுறைகளை மீறிய இராணுவத்துக்கு எதிராக அரசின் நடவடிக்கை என்ன?" என முன்னாள் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குருந்தூர்மலைக்கு நேற்று முன்தினம் தொடக்கம் பௌத்த பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் பாரிய அளவில் செல்கின்றனர் எனவும், அங்கு பாரிய அளவில் நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணிகள் இடம்பெறுகின்றன எனவும் அப்பகுதி மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு என்றுமில்லாதவாறு ஆறுமுகத்தான்குளம், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் இராணுவம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுகின்றது எனவும், அவ்வாறு பாதுகாப்புக் கடமையிலுள்ள இராணுவத்தினர் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்களுக்குச் செல்பவர்களை வழிமறிப்பதாகவும் மக்களால் மேலும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று குருந்தூர் மலைப் பகுதிக்குச் சென்ற ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டனர்.

அப்போது அங்கே இராணுவத்தினர் கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பில் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"கோவிட் சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைதுசெய்வோம் என இராணுவத்தளபதி அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் நிலையில், இங்கு இராணுவத்தினரும், தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்படுகின்றனர்.

குருந்தூர் மலையில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் ஏதோ இடம்பெறுகின்றது என அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர். குறிப்பாக குமுழமுனை, ஆறுமுகத்தான்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு வயல்களில் வேலைசெய்கின்ற பொதுமக்கள் எனப் பலராலும் எங்களுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உடனேயே செல்ல முடியாத நிலையில், நேற்று குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம். அங்கு குருந்தூர் மலைக்குச் செல்லும் வழியில் ஆறுமுகத்தான் குளத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு குருந்தூர் மலைக்கு நுழையும் வீதியில் குருந்தூர் மலைக்கு அண்மையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு இராணுவத்தினர் எம்மை அங்கு செல்லவிடாது தடுத்திருந்தனர். அப்போது குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறிக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், நாம் குருந்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என அந்த இராணுவத்தினரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், குறித்த இராணுவத்தினர், தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தி விட்டு உள்ளே செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.

அந்தவகையில், நேரடியாக நாம் குருந்தூர் மலை அடிவாரத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் திணைக்களத்தினரும், அதிகளவான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு நேற்று முன்தினம் பாரிய அளவில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றமை குறித்தும் அங்கிருந்த இராணுவத்தினரிடம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

பௌத்த பிக்குகளும், வழிபாடுகளுக்குரியவர்களும், இராணுவத்தினரும் தான் அங்கு வருகை தந்தனர் என்று இராணுவத்தினர் பதிலளித்திருந்தனர்.

அதேவேளை, அங்கிருந்த இராணுவத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பேணாதிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அந்தவகையில் இராணுவத்தளபதி கோவிட் சுகாதார நடைமுறைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் ஏன் கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். அப்போது அங்கிருந்தவர்கள் சற்றுத் தடுமாறியதுடன், உடனேயே அவர்கள் முகக் கவசங்களையும் அணிந்து கொண்டனர்.

இந்நிலையில் நாங்கள் மலையடி வாரத்திலிருந்து, குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்லவேண்டும், அங்கு நாம் எமது சமய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் தொல்லியல் திணைக்களத்தினுடைய அனுமதி பெறப்படவேண்டும் எனவும், அவ்வாறு அனுமதி பெற்று வந்தால் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல அனுமதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அப்படியெனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வுக்கு வந்தவர்கள் அனுமதிகளைப் பெற்று வந்தார்களா எனக் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அனுமதிகளைப் பெற்றே வந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தார்கள்.

இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிடும்போது, பௌத்த பிக்குகள் கிட்டத்தட்ட 29 பேர் அங்கு வந்திருந்தனர் எனவும், அத்தோடு கிட்டத்தட்ட30 ஓட்டோக்கள் அங்கு வந்தன எனவும், அதில் வந்தவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இதுதவிர ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நட்சத்திரத் தரங்களில் உள்ள அதி சொகுசு இராணுவ வாகனங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள், இராணுவ வாகனங்கள் எனப் பல வாகனங்கள் அங்கு சென்றன எனவும் பொதுமக்கள் எம்மிடம் முறையிட்டிருந்தனர்.

இந்த விடயத்திலே குறிப்பாக, முல்லைத்தீவு என்பது தமிழர்களுடைய இடமாகும். இதிலே குருந்தூர் மலையானது எங்களுடைய தமிழ் மக்களுக்குரிய மலையாகும். இங்கு எமது தமிழ் மக்கள் பூர்வீகமாக ஐயனார் வழிபாடுகளைச் செய்ததுடன், குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் எமது தமிழ் மக்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் எமது தமிழ் மக்களுக்குக் குருந்தூர் மலையிலுள்ள ஐயனார் காவல் தெய்வமாக இருக்கின்றது என எமது தமிழ் மக்கள் நம்புகின்றனர். இப்படியாகத் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை, சிங்கள மயப்படுத்தத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள்.

இது தவிர கோவிட் சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைதுசெய்வோம் என்று இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

இவ்வாறிருக்க குருந்தூர் மலையில் கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினர் கைதுசெய்யப்படாதது ஏன்? அவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினருக்குரிய நடவடிக்கை என்ன? அவ்வாறு இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை மீறியதற்குரிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

முள்ளிவாய்க்காலிலே கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தலைச் செய்தாலும் கைது செய்யப்படுவோம் என்று கூறப்படுகின்றது. ஆனால், இங்கு கோவிட் தொற்று அசாதாரண நிலையையும் கருத்தில் கொள்ளாது, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாது தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை சிங்களமயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் பாரிய இராணுவப் பாதுகாப்புக்களுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

இது எந்த வகையில் நியாயம்? அதேவேளை குருந்தூர் மலையில் இடம்பெறும் அகழ்வாராட்சி நடவடிக்கைகளில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளை இங்கு மீறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையின் மேற்பகுதிக்குச் செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் அறிய முடியாதுள்ளது. குறிப்பாகக் கட்டடங்கள் எவையாவது கட்டப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அறிய முடியாதுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US