பிரித்தானியாவின் செயல் நட்புரிமையற்றது! - தினேஸ் குணவர்த்தன
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள யோசனை, இலங்கையின் இறைமைக்கு சவாலானாதாகும்.அத்துடன் இந்த யோசனையை முன்னகர்த்தும் பிரித்தானியாவின் செயல் நட்புரிமையற்ற செயல் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அமர்வில் பிரித்தானியாவின் தலைமையிலான நாடுகள் கொண்டு வரவுள்ள யோசனையின் வரைபு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த வரைபு குறித்து கருத்து வெளியிட்டபோதே இந்தக்கருத்துக்களை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த யோசனையில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இலங்கையின் இறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மேற்கொள்ளும் இந்தசெயல் நட்புரிமையற்றது என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியா தலைமையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அமர்வில் முன்னகர்த்தப்படும் யோசனையின்படி இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்காணிப்புக்களை அதிகரிப்பதுடன் அறிக்கையையும் வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.