கிளிநொச்சியில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தெரிவித்து ஊடக சந்திப்பு
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டிய பிரார்த்தனை வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசியல் கைதி ஒருவரின் தாயார் குறிப்பிடுகையில்,
நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக எமது பிள்ளைகள் சிறையில் வாழ்கின்றனர்.
இந்தநிலையில் கொரோனா தொற்றும் அபாயமான நோயாகக் காணப்படுகின்றது. நாளாந்தம் இறப்பது தொடர்பான செய்திகளே எமக்குக் கிடைக்கின்றது.
இந்த நோயினை கருத்தில் கொண்டேனும் எமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது பிள்ளைகளின் விடுதலையை வேண்டி இன்று பலரும் இணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
அனைவரினதும் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து, எமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா குறிப்பிடுகையில்,
இந்த ஜனாதிபதி பௌத்த கொள்கையை நேசிப்பவர். நானும் பௌத்த கொள்கையை நேசிப்பவன். புத்த பெருமானின் போதனைகளைப் போதிப்பவன்.
ஜனாதிபதியான நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அனுராதபுரத்தில் பிறந்தவன் நான். புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் சிறிய வயதில் கற்றது போன்று நானும் அந்த போதனைகளைக் கடைப்பிடிக்கின்றேன்.
அது மாத்திரமல்ல, நீங்கள் இராணுவ தளபதியாக இருந்த போது உங்கள் குடும்பம் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பது தெரியும்.
இராணுவ தளபதியாக யுத்தத்தில் ஈடுபட்ட உங்களிற்கு இவ்வாறு சிறைகளில் உள்ளவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் தொடர்பில் அறிந்திருப்பீர்கள்.
உங்களைத் தயவாகக் கேட்கின்றேன். நீங்கள் இவர்களை விடுதலை செய்யுங்கள்.
அவ்வாறு விடுதலை செய்தீர்கள் எனில் உங்களிற்கு இருக்கும் இரண்டு பிள்ளைகளிற்கும் நீண்ட புண்ணியத்தைப் பெற்றுக் கொடுப்பீர்கள் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் குறிப்பிடுகையில்,
இப்போது உள்ள ஜனாதிபதி பௌத்த மதத்தை அதிகம் நேசிப்பவர். பௌத்தம் கூறுவது போன்று இவ்வாறு சிறைகளில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பங்களோடு இணைக்கப்படுவதற்கு ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும்.
தமது உறவுகள் சிறையில் வாழ்கின்றபோது அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பௌத்த மதம் எதைப் பொதிக்கின்றதோ அதனை இந்த ஜனாதிபதியும் செய்யும் வகையில், இவ்வாறு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து அவர்களின் குடும்பத்துடன் இணைக்க வேண்டும் எனவும், அதிலும் தைப்பொங்கலிற்கு முன்னராக அதனைச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதி ஜாட்சன் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தற்போது சிறைகள் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் அரசியல் கைதிகள் விடுதலைக்கான பிரார்த்தனை வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி பல்வேறு கவன ஈர்ப்புக்களை முன்னெடுத்த வருகின்றோம்.
அதற்கு அமைவாக இந்த ஊடக சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எதிர்வரும் தை பொங்கலிற்கு முன்னராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் குாகிலவாணி கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றது.
தனது மகன் சிறையிலிருந்தபோது மகனிற்கு ஒருவாய் உணவு வழங்குவதற்கான பிரதமர் அனுபவித்த துயரம் போன்றே இன்று பல குடும்பங்கள் அனுபவிக்கின்றார்கள். இந்த உண்மை நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எனவே அவ்வாறு பல ஆண்டுகளாகத் தவிக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு உங்களிற்கு உள்ளது. நீங்கள் அனுபவித்த வலிகளை அரசியல் கைதிகளின் குடும்பங்கள் நீண்டகாலமாகா அனுபவித்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலங்களைக் கழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அரசியல் கைதியாக உள்ள குடும்பங்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றனர்.
அவர்களின் குடும்பத் தலைவர் இல்லாமையினால் அவர்கள் படும் துன்பங்கள் அதிகம். இவ்வாறான நிலையைக் கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்தீர்கள்.
அனுபவங்களைக் கடந்துவந்த நீங்கள் இவ்வாறு பாதிக்கப்படும் அரசியல் கைதிகளின் குடும்பத்திற்கு விடுதலையைக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.