யானைகளுடன் மல்லுக்கட்டிய சிறுவர்கள்! வெளியான காணொளி
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் யானைகளைச் சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு தற்போது வழமையாகி விட்டது. நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் உள்ள நிலையில் மேற்குறித்த பிரதேச வயல்வெளிப் பகுதியில் தொடர்ச்சியாகக் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகள் 10 முதல் 20 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளைச் சிறுவர்கள் விரட்டும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
குறிப்பாக கல்முனை மாநகர எல்லை பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கீறின் பில்ட் தொடர்மாடி குடியிருப்பு பகுதி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொலிவேறியன் குடியிருப்பு வீட்டுத்திட்டப் பகுதியை அண்மித்த வயல் வெளியில் காட்டு யானைகளின் வருகை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இரவு , பகல் நேரங்களில் குறித்த குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தரும் நிலையில் உள்ளதாகவும் இதனால் மிகவும் அச்ச நிலையில் தாம் வசித்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் வயல் வெளிகளில் சஞ்சரித்துக் காணப்படும் குறித்த காட்டு யானைக் கூட்டத்தினை காண்பதற்காய் பிற்பகல் வேளையில் பொது மக்கள் வருகை தந்து பார்வையிட்டு செல்வத்தினை காணக்கூடியதாய் உள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைதீவு, இமாவடிப்பள்ளி, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தந்து உடைமைகளை சேதம் விளைவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகையென்பது தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.