சிறுவர்கள் மத்தியில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பரவல்: வைத்தியர் தீபால் எச்சாிக்கை
இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் கோவிட் - 19 பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கோவிட் - 19க்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் புறக்கணித்து சுதந்திரமாக நடமாடினால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டியிருக்கும்.
சிறுவர்கள் கல்வி கற்க பாடசாலைகளை திறந்து வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், பயணங்களுக்குச் சென்றால், உறவினர்களைப் பார்க்க முயன்றால், மீண்டும் பாடசாலை அமைப்பை மூட வேண்டியிருக்கும்.
சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்துகளில் மீண்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே பொதுமக்கள் வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளும் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
