சிறுவர்கள் ஆபத்தான உபகரணங்களை கையாள தடை
வாகன சில்லுகளை மாற்றவும், உணவகங்களில் சமைக்கவும், நில ஓடுகளை வெட்டவும் அல்லது ஆபத்தான உபகரணங்களைக் கையாளவும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்துவது புதிய விதிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட உள்ளதாக தொழில் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக, தொழில் அமைச்சகம் 16 முதல் 18 வரை சிறுவர்களுக்கு அபாயகரமானதாகக் கருதப்படும் தொழில்களின் பட்டியலை விரிவுபடுத்தும் என்று தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த விதிமுறைகளை சட்ட வரைஞர் மதிப்பாய்வு செய்து வருகிறார் இந்தநிலையில் முன்மொழியப்பட்ட விதிமுறைகளின் கீழ், குழந்தைகளை மாணிக்கம் மற்றும் மணல் சுரங்கம், ஆழ்கடல் மீன்பிடித்தல், இரும்புகளை வார்ப்பது மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழில்களில் பயன்படுத்த முடியாது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைகுழுவின் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ள தகவல்படி, சிறுவர்களுக்கு அபாயகரமான பட்டியலை விரிவாக்குவதன் மூலம், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனை வீட்டு உதவியாளராகப் பயன்படுத்தினாலும் கூட அபாயகரமான வேலைகளில் அவரை பயன்படுத்த முடியாது.
உதாரணமாக, ஒரு சிறுவன் ஒரு குடியிருப்பில் இருந்தாலும் கூட அவரை வாகனச் சில்லை மாற்ற பயன்படுத்த முடியாது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் வணிக சமையலறைகளில் சமைப்பதற்கு சிறுவர்களை பயன்படுத்த முடியாது.
இதற்கிடையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, 15 அகவைக்குட்பட்டவர்கள் தொழில் செய்யும் வீடுகளில் சோதனைகளை மேற்கொள்ள ஒரு குழுவை நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.