யானைகளின் அட்டகாசத்தினால் போரதீவுப்பற்று பிரதேசசபை வாகனங்கள் சேதம் (Photos)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, வெல்லாவெளி விவேகானந்தபுரம் தளவாய் பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் போரதீவுப்பற்று பிரதேசசபை வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
போரதீவுப்பற்று பிரதேச சபையினால் பராமரிக்கப்படும் கழிவுகளைச் சேமிக்கும் இடத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.
அப்பகுதியில் இன்று காலை யானையின் பிரசன்னம் அதிகமாகயிருந்த காரணத்தினால் குறித்த பகுதியில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் கழிவுகளை கொட்ட சென்றுள்ளனர்.
இதன்போது காட்டுப் பகுதியிலிருந்து யானை துரத்தி வந்த போது அங்கிருந்த வாகனங்கள் யானையின் அச்சுறுத்தலால் பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனங்கள் கடும் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பிரதேச வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதனை தொடர்ந்து அங்கிருந்து வனஜீவராசிகள் அதிகாரிகள் வாகன உதவியுடன் வருகைதந்து சேதமடைந்த வாகனங்களை அங்கிருந்து வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள காடுகளில் உள்ள யானைகளினால் தினமும் அச்சுறுத்தல்கள்
மத்தியிலேயே கழிவு சேகரிப்பு நிலையத்தில் கழிவுகளைக் கொட்டிவருவதாக பிரதேசசபை
ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.







