மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சினியின் மேற்பார்வையில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்தர பணியாளர்களாகக் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியங்களுக்கும் இதன்போது முதல்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு 6 மாதங்கள் பூர்த்தியாகிய உத்தியோகத்தர்களுக்கே இதன்போது பைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் ஏற்றும் ஆரம்ப நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி, பிரதான தாதிய உத்தியோகத்தர் நா.சசிகரன் உள்ளிட்ட வைத்தியசாலையில் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு சுகாதார சேவைகள் அலுவலக பிரிவுகளிலும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்குச் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள சுகாதார தரப்பினருக்கு இன்று வரை ஐம்பத்து நான்கு (54) பேருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வரை சினோபாம் தடுப்பூசி முதலாம் கட்டமாக 18251 நபர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 11226 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பைசர் தடுப்பூசி முதலாம் கட்டமாக
1800 நபர்களுக்கும், அஸ்ராசெனிக்கா முதலாம் கட்டமாக 53 பேருக்கும் இரண்டாம்
கட்டமாக 52 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.