கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற அதிரடிப்படை வீரர் சடலமாக மீட்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைப் பகுதியில் இன்று (13) பகல், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிர தேடுதல்
இன்று (13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி மணல் துறையூடாக மகாவலி ஆற்றைக் கடந்து, சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை சுற்றிவளைத்து கைது செய்வதற்காக சூரியபுர STF முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மகாவலி ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக, பொலிஸ் சார்ஜன்ட் சாந்த கிஹான் ரணசிங்க (39) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். உயிரிழந்த சார்ஜன்ட், பத்தரமுல்ல ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று காலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சடலம் மீட்பு
அதனை தொடர்ந்து இன்று பகல் சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு, பாதுகாப்புப் படையினரிடையிலும் அப்பகுதி மக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.