காணாமல் போனவர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட களுதாவளைக் கடலில் நீராடிய போது காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று காலை களுதாவளைக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று முன் தினம் மதிய உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற போதும் இரவு வரை வீடு திரும்பவில்லை என தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து அவரின் பெற்றோர் நேற்று காலை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதும் காணாமல் போனவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே சடலம் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







