தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் சபாநாயகரின் உடல் தகனம்!
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டாரவின் பூதவுடல், தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கமைய இன்று மாலை கொட்டிகாவத்தையில் தகனம் செய்யப்பட்டது.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, முன்னாள் சபாநாயகர் W.J.M.லொக்குபண்டார தனது 81வது வயதில் நேற்று உயிரிழந்தார். தனது நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில், W.J.M.லொக்குபண்டார அமைச்சரவை அமைச்சர் மற்றும் மாகாண ஆளுநராக பணியாற்றினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், சுதேச மருத்துவ அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.
1994 முதல் 2001ம் ஆண்டு வரை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராகவும், 2004 முதல் 2010 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்றத்தின் 16ஆவது சபாநாயகராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.