பூதன்வயல் கிராமத்தில் குடும்பபெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு (Video)
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூதன்வயல் கிராமத்தில் வசித்து வந்த 36 அகவையுடைய யோகராசா றாஜினி என்ற பெண்ணே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 04.01.2022 ஆம் திகதியிலிருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்துவந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 அகவை ஆணும் 16 அகவை பெண் பிள்ளையும் உள்ள நிலையில் முதற்கணவர் தட்டையர்மலை முத்துஜயன்கட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு பூதன்வயல் கிராமத்தில் கிராம சேவையாளரின் பதிவுகூட இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. வேலைக்காக வந்து நின்ற ஆணுடன் உயிரிழந்த பெண்ணும் தற்காலிக சிறு கொட்டிலில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
கடந்த 04.01.2022 அன்று தொடக்கம் காணாமல் போன குறித்த பெண் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில், தென்னங்காணியில் கிடந்த கைப்பையே இவர் உயிரிழந்தமையினை இனம் காட்டியுள்ளது.
உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது பிரதேச மக்களால் இனம்காணப்பட்டு கிராம சேவகருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனம்காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்தியர் பி.நிலுசன், தடையவியல் பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 அகவையுடைய கிளிநொச்சியினை சேர்ந்த
ஆண் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


