சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
புதிய இணைப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இதன்போது அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த அதிகாரி அன்றைய தினம் துரிதமாகச் செயற்பட்டு, துப்பாக்கிப்பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு மிகப்பெரிய பேரழிவும் பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் அவ்வாறு செயற்பட வேண்டியிருந்தது என்பதையும் அவர்கள் அமைச்சருக்கு விளக்கியுள்ளனர்.
இதன்போது அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த நீதி அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் நியாயம் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழ்நதனர்.
இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறையில் நேற்று முன் தினம் (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரல்லை சிறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் (06) நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்திருந்தனர்.
இறுதி அஞ்சலி
இந்நிலையில், இவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பிற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரி எஸ். எச். எஸ். சந்திரவன்ச, வார்டன்கள் எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்கா, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்கா, டி. டட்லி, புஷ்ப குமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்களும் இதே முறையில் எடுத்துச்செல்லப்பட உள்ளன.
இந்த மோதலில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
you may like this video