வவுனியாவில் தேங்கி கிடக்கும் கோவிட் தொற்றால் மரணமடைந்த 20 பேரின் சடலங்கள்
வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 20 பேரின் சடலங்கள் தேங்கி உள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது.
கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த மின் மயானத்தில் நாள் ஒன்றுக்கு 6 சடலங்களையே தகனம் செய்யக் கூடியதாகவுள்ளது. ஆனால், தற்போது வவுனியாவில் இறப்புக்கள் அதிகரித்து வருவதனால் சடலங்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் மரணமடைந்த 20 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்களை முழுமையாகத் தகனம் செய்ய மூன்று தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கோவிட் தொற்றிலிருந்து விடுபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதார பிரிவினரதும் கோவிட் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.



