கல்முனையில் கடலில் மூழ்கிய படகு
இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று இன்று (18) காலை கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காற்றினால் கடலில் மூழ்கியடிகுறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படகை இழுப்பதற்கான முயற்சி
சுமார் 65 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான குறித்த படகை கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது தவிர இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெற்று வருவதுடன் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இறங்கு துறை இன்றி பாரிய சிரமங்களை கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடலரிப்பு
கடற்கரை பிரதேச கடற்தொழிலாளர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்தி வைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும், தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்கு பெரும் கவலை அளிப்பதாகவும், இந்த நிலை ஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் ஒரு காரணமாகும் என பிரதேச கடற்தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக்கல் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் கடற்கரை ஒன்று முழுமையாக இல்லாமல் போனலும் போகலாம் என்ற அச்சம் இப்பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





