மீன்பிடி திணைக்களத்தின் அறிவுறுத்தலை மீறி கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி(Photos)
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போது, குடும்ப நிலைமை காரணமாக நேற்று (30.01.2023) இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச் சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கடற்தொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கு சென்றுள்ளனர்.
இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்
இந்த நிலையில் கடல் குழப்பம் காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி (41வயது) என்பவரே காணாமல்போயுள்ளார்.
காணமல்போனவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணாமல்போனவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
கடல் சீரற்ற நிலை
இது தொடர்பில் மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடல் சீரற்ற நிலையில் உள்ளதன் காரணமாக தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலையுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றமாகவுள்ளதனால் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான
நிலையமும் மீன்பிடி திணைக்களமும் தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
