கறுப்பு யூலை தமிழ் இனப் படுகொலை தமிழர்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகும் - இரா.துரைரெத்தினம்
இப்படிப்பட்ட தமிழினத்திற்கெதிரான இனவாத அரசின் செயற்பாடுகளைத் தடுத்த நிறுத்த தமிழர்களாகிய நாங்கள் ஓரணி திரள்வோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழினப் படுகொலையை நிறைவேற்றி 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அக் காலப் பகுதியில் தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்த, நிரந்தர வாழ்வாதார கட்டமைப்பைக் கொண்ட, கலாச்சார அடையாளங்களைக் கொண்ட, கல்வியில் ஆளுமை பதித்த, தமிழர்கள் தலைமைத்துவத்தினால் ஆளுமை செலுத்திய, பொருளாதார கட்டமைப்புள்ள இடங்களை அடையாளப்படுத்தி அழித்து, எரிக்கப்பட்டும், இடம் பெயர வைத்தும், வெட்டி கொலை செய்தும், கடத்தி கொலை செய்தும், காணாமலாக்கப்பட்டும், தமிழர்கள் வாழ்ந்த தென்னிலங்கைப் பகுதியிலேயே அகதிகளாக்கப்பட்டும் தமிழர்களின் பலமான தளங்கள் இலங்கை அரசினால் இல்லாமலாக்கப்பட்டன.
இவ் தமிழின அழிப்பிற்கு யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் யூலை 23ந் திகதி அன்று 13இராணுவ வீரர்கள் கன்னி வெடியில் கொல்லப்பட்டதை வைத்துக் கொண்டு யூலை 24ந் திகதி கொழும்பிலுள்ள கனத்தை மயானத்தில் 13 சடலங்களையும் நல்லடக்கம் செய்வதற்குத் திட்டமிட்டு இக் கொலையைக் காரணம் காட்டி சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அன்றைய து.சு ஜெயவர்தன ஐக்கிய தேசிய கட்சி அரசு சிங்கள மக்களுக்கான படுகொலை எனச் சித்தரித்து காடையர்களைத் தூண்டி விட்டு இனப் படுகொலையைச் செய்து முடித்தது.
இவ் அழிவிலிருந்து இலங்கை அரசு எச் சந்தர்ப்பத்திலும் தமிழர்களைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. 38 ஆண்டுகள் கடந்தும் கறுப்பு யூலை தமிழின கொலை வெறி தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மறைக்கப்பட முடியாதவை.
இதன் தொடர்ச்சியாக இன்றுவரை நடைபெற்ற தமிழினத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட பல கறுப்பு யூலைகள் நிகழ்ந்தேறி விட்டன எனத் தெரிவித்துள்ளார்.