பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவு தொடர்பில் விசேட அறிவிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு சட்டமூலம் அடுத்த வாரம் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் இதனை கூறியுள்ளார்.
இந்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
இதன்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது என்பது தேசிய மக்கள் சக்தியால் மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியாகும்.
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) சமீபத்தில் கவலை தெரிவித்தது.
இந்நிலையில் இந்த சட்டமூலம் இந்த மாதம் இரத்து செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் ஒரு சிறப்புக் குழுவையும் நியமித்தார். மேலும் அந்தக் குழுவின் அறிக்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.




