நாட்டில் அதிகரிக்கும் துவிச்சக்கரவண்டி திருட்டு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் கடந்த ஒருவாரத்தில் 10 துவிச்சக்கரவண்டிகள் திருட்டுபோயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் மீண்டும் துவிச்சக்கரவண்டி பாவனைக்கு திரும்பியதையடுத்து தற்போது ஒரு துவிச்சக்கரவண்டி 50 ஆயிரம் ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது.
பொலிஸ் முறைப்பாடு
துவிச்சக்கரவண்டிகளை பொதுமக்கள் வர்த்தக நிலையங்கள், சந்தை, வங்கிகள் போன்ற பொது இடங்களுக்கு மன்னால் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அங்கு சென்று தமது தேவையை பூர்தி செய்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது பூட்டி விடப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளதாக இன்று(07) பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
மக்கள் அவதானம்
தற்போது துவிச்சக்கரவண்டி திருடும் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளனர். தினமும் 2 துவிச்க்கரவண்டிகள் வீதம் திருட்டு போயுள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்கின்றனர்.
ஆகவே இந்த கொள்ளையர்களிடமிருந்து பொதுமக்கள் தமது துவிச்சக்கரவண்டிகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
செய்தி-சரவணன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர் இன்றைய தினம்(7) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை.
எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை யாழ்ப்பாண பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.
யாழ்.நகர பகுதியில் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் திருடப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றின் சிசிரிடி கமராவின் உதவியுடனேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே அவரிடமிருந்து 6 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- தீபன்
திருகோணமலை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு இன்று (07) வருகை தந்துள்ளார்.
இதன்போது, சிற்றூழியர்களின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு சென்று பெட்ரோலை திருடியதாக தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் திருடும் போது சந்தேகநபரை திருகோணமலை பொது வைத்தியசாலை காவலாளிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி-பதூர்தின் சியானா