பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (31.08.2026) இடம்பெற்றுள்ளது.
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வராகவும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாகவும் சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய இம்மானுவேல்
இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து இங்கிலாந்து சென்ற அவர், அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் ஜெர்மனிக்குச் சென்று, மூன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு வரை குருவாகப் பணியாற்றினார்.
அங்கு பணியாற்றிய காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.
ஈழ விடுதலைப் போராட்டம்
இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராக அருட்தந்தை இம்மானுவேல் தெரிவுசெய்யப்பட்டார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தமிழீழ தேசியத் தலைமையின் நிலைப்பாட்டுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேலை, தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.


