பெல்ஜியத்தில் தனது 5 பிள்ளைகளைக் கொலை செய்த தாய்: 16 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு
தனது 5 குழந்தைகளைக் கொலை செய்து ஆயுள் தண்டனையை பெற்ற பெண்ணொருவர் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கருணை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெல்ஜியம் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஜெனிவீ லெர்மிட் என்பவர், கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதியன்று தனது மகன் மற்றும் 4 மகள்மாரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அத்துடன் தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் உயிர் பிழைத்த நிலையில், பொலிஸாரை தொடர்பு கொண்டு சரணடைந்துள்ளார்.
மனநல பிரச்சினை
உயிரிழந்த அவரது 5 பிள்ளைகள், 3 முதல் 14 வரையிலான வயதைக் கொண்டவர்களாவர். தான் பெற்ற பிள்ளைகளையே இப்படி கொடூரமாகக் கொலை செய்த ஜெனிவீக்கு ஆயுள் தண்டனை விதித்து பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சிறைவாசத்திலிருந்த பெண்ணுக்குத் தீவிர மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையிலிருந்த அவர் 2019இல் சிறையிலிருந்து மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மனநல பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளேன், எனவே கருணை கொலை செய்துவிடுங்கள் என ஜெனிவீ தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
கருணை கொலை
பெல்ஜியத்தில் ஒரு நபர் தவிர்க்க முடியாத சூழலில், கருணை கொலை செய்து கொள்வதற்கு அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது. அதன்படி, ஜெனிவீ விருப்பத்தின் பேரில் தனது குழந்தைகளைக் கொன்ற பெப்ரவரி 28ஆம் திகதி அன்றே சரியாக 16 ஆண்டுகள் கழித்து கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உரிய வகையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கருத்துகளைப் பெற்ற பின்பே கருணை கொலை செய்யப்பட்டதாகச் சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் தெரிவித்துள்ளார்.
உடல் நல மற்றும் மனநல காரணங்களைக் காட்டி பெல்ஜியத்தின் கருணை கொலைக் கோரிக்கைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டில் மட்டும் 2,966 பேர் கருணைக்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது 2021ஐ ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
