மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகளில் இடநெருக்கடி! வீட்டிலேயே உயிரிழந்த கோவிட் நோயாளி
மேல் மாகாணத்தில் கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தெரிவு செய்யப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளின் படுக்கை திறன் முழு திறனை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சுகாதாரத் துறை செயலாளர் காமினி தர்மசேன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இது ஒரு ஆபத்தான சூழ்நிலை ஆனால் மறைக்க எதுவும் இல்லை. இதேவேளை, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் இடம் இல்லாததால் கடந்த புதன் கிழமை வீட்டிலேயே உயிரிழந்ததாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 1,531 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 362 பேர் கோவிட் வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கைக்குள் மேலும் 6 பேர் நேற்றைய தினம் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.