இங்கிலாந்தில் 1000 ஆண்டுகளில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் பேயக்ஸ் சித்திரத் தையல்
கிபி 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற 'பேயக்ஸ் சித்திரத் தையல்' கலைப்படைப்பு சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்குத் தற்காலிகமாகத் திரும்பக் கொண்டுவரப்படுகிறது.
லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தைக் காண்பதற்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று(01.07.2026) தொடங்கிய உடனே, பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைய வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கியதால் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
பேயக்ஸ் சித்திரத் தையல் கலைப்படைப்பு
70 மீட்டர் நீளமுள்ள இந்த கம்பளி மற்றும் லினன் துணியிலான கலைப்படைப்பு, கி.பி 1066இல் நடைபெற்ற நார்மானியர்களின் இங்கிலாந்து படையெடுப்பையும், புகழ்பெற்ற ஹேஸ்டிங்ஸ் போரையும் மிகத் துல்லியமான சித்திரத் தையல்கள் மூலம் விவரிக்கிறது.
கடந்த 950 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரான்சில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தக் கலைப்படைப்பை, கடந்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இங்கிலாந்து மன்னர் சார்லஸின் கோரிக்கையை ஏற்று கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இந்த செப்டெம்பர் மாதம் முதல் 2027 ஜூலை வரை இது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
மிக மென்மையான இந்தத் தையல் துணியைப் பாதுகாப்பதற்காக உலகிலேயே மிக நீளமான சிறப்பு கண்ணாடிப் பெட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிரதிபலனாக, இங்கிலாந்தின் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'சட்டன் ஹூ' போர்க்கவசப் பொக்கிஷங்களை பிரான்ஸ் அருங்காட்சியகங்களுக்குப் பிரித்தானியா கடனாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சீர்குலைக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் - கொக்கட்டிச்சோலை தவிசாளர் கடும் சீற்றம்