மட்டக்களப்பு கள்ளியங்காட்டு இந்து மயானத்தின் தகனசாலை தொடர்பில் தி.சரவணபவன் வெளியிட்ட தகவல் (Video)
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் அமைக்கப்படும் தகனசாலை தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் மக்களை தவறான பாதையில் திசைதிருப்ப முனைவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கள்ளியங்காட்டு இந்து மயானம்
“மட்டக்களப்பு மாநகரசபைக்கு மிக அவசியமான தேவையாக இருப்பதன் காரணமாகவே இந்த நிர்மாணப்பணிகளை மிகவும் துரிதமாக முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20க்கும் குறைவான வாக்களை மட்டுமே பெற்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் அமைக்கப்படும் தகனசாலை தொடர்பில் பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்கி மக்களை தவறான பாதையில் திசைதிருப்பும் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த தகனசாலை அமைக்கும் பணிக்கு தடையினை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசியல் கட்சியொன்றின் தலைவரும் இது தொடர்பில் தகனசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தகாரருடன் கலந்துரையாடியுள்ளதுடன் குறித்த தகனசாலைக்கு பொதுமக்களின் எதிர்ப்பு உள்ளதாக ஒரு கருத்தினையும் தெரிவித்துள்ளார்.
கள்ளியங்காடு இந்து மயானத்தில் அமைக்கப்படும் தகனசாலை நிறைவுபெற்றால் மட்டக்களப்பு நகருக்குள் சுற்றாடலுக்கான பாதுகாப்பான ஏற்பாடாகவே அது இருக்கும். சடலங்களை எரிக்கும்போது திறந்தவெளியில் வேப்பை மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும்போது சுற்றாடல் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் வேப்பை மரங்களும் அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
ஆனால் தகனசாலை அமைக்கப்பட்டு அதற்குள் சடலங்கள் எரிக்கப்படும்போது நூறுக்கு அடி உயிரத்திற்கு மேல் புகைகள் வெளியேறும் நிலையுள்ளது. அத்துடன் அங்கு பொருத்தப்படும் இயந்திரமான இலங்கை சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதி பெறப்பட்ட இயந்திரமே அங்கு இணைக்கப்படவுள்ளது.
இந்த தகனசாலையில் பொறுத்தப்படும் இயந்திரம் மூலம் மாநகரசபையின் சுற்றாடல் பாதுகாக்கப்படும் என்பதுடன் இதுபோன்று கல்லடியிலும் ஆலையடிச்சோலையிலும் இதுபோன்று தகனசாலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சமூக விரோத கருத்துகளை கருத்தில்கொள்ளாது மாநகரசபையின் செயற்பாட்டுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பிணை வழங்கவேண்டும்.
இதேபோன்று எரிபொருள் விநியோகம்தொடர்பிலான மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட குடும்ப அட்டை மூலமாக எரிபொருள் வழங்குவதான தீர்மானத்தின் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்த அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுக்கவேண்டும்.இதன்மூலம் அதிகமான வரிசைகளில் நின்று மக்கள் எரிபொருள் பெறும் செயற்பாடுகள் தவிர்க்கப்படும் நிலையேற்படும்”என்றார்.