மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி திறந்து வைப்பு
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் திறந்து வைக்கப்பட்டு ,தீபச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவு தூபி போதகர் மகேசன் ரொசான் தலைமையில் திறக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டவர்களையும், அதன் பின்னணியில் நின்றவர்களையும் தாங்கள் மன்னிப்பதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சசிநந்தன், மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன் நவரூபரஞ்சினி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், தேவ அடியார்கள் கலந்துகொண்டு தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.