மட்டக்களப்பில் மேலும் 12 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 12 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக வயோதிப பெண்னொருவரும் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பயணியர் வீதியில் உள்ள வீடொன்றில் 84வயதுடைய பெண்னொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலம் அன்டிஜன் பரிசோதனைகளுக்குப்படுத்தப்பட்ட போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான கொக்குவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்,எழுந்தமானமாக, பயணத்தடைகளை மீறியவர்கள் என 117பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்குப்படுத்தப்பட்ட நிலையில் அதில் 12பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோவிட் மரணங்கள்
இடம்பெற்றுள்ளதுடன், இதில் 36வயதுடைய ஏழு மாத கர்ப்பிணிப்பெண்ணும் அடங்குவதாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன்
தெரிவித்துள்ளார்.