மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலொன்றில் தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலி
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(27) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் பலி
உயிரிழந்த சிறுவர்களின் தாயாரின் சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு வந்திருந்த குடும்பம் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

தீ விபத்தில், பஸ்ஸார பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதுடைய கசுன் மதுசங்க ஆகிய இரண்டு குழந்தைகள் புகையை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குழந்தைகள் தங்களது தாயார் சிகிச்சை பெற்று வந்த காரணத்தால், கடந்த 23ஆம் திகதி முதல் தந்தையுடன் மட்டக்களப்பிலுள்ள விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகளின் தந்தை மதுபானம் அருந்தச் சென்றபோது, குழந்தைகளை அறைக்குள் பூட்டிவிட்டு வெளியேறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் திரும்பி வந்தபோது அறையில் தீப்பற்றியிருந்ததையும், குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்ததையும் கண்டுள்ளார்.
உடனடியாக இரு குழந்தைகளும் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். விடுதியில் ஏற்பட்ட தீயை அங்கிருந்த ஊழியர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- பவன்

