பட்டலந்த போன்று வடக்கில் இயங்கிய வதை முகாம்கள்! அநுர அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன
பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன. அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்(P.Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரித்தானியாவின் தடை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மையில் 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் இருந்த பலரில் 4 பேரை பிரித்தானியா தடை செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் அந்த ஒரு தலைப் பட்சமான முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள்.
பட்டலந்த அறிக்கை பற்றி பேசும் அவர்கள், பல வதை முகாம்கள் வடக்கில் இயங்கின. இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை.
கடந்த கால அரசாங்ககள் என்ன பதிலை தந்தார்களோ அதே பதிலை தான் இவர்களும் சொல்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்திற்கு ஒரு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக மெஜிக் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம்.
அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாக செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
