அரச அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிறுத்த வேண்டும்: சிறீகாந் வலியுறுத்து
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைக்கப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் சிறீகாந் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்று ( 05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எந்தவிமான ஆரோக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. வெறுமனே அதிகாரிகளை குற்றஞ்சாட்டியதையே காணக்கூடியதாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் பெரும்பாலான காலப் பகுதியில், ஆளுந்தரப்பாக இருந்து, இந்த பிரதேசத்தின் அரச நிர்வாக செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியில் தலைமை வழங்கிய தரப்பு என்ற அடிப்படையில், அரச அதிகாரிகள் மீது முழுக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
யாராவது அரச அதிகாரிகள் கடமையை சரியாக முன்னெடுக்காது இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. மாறாக அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது.
கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்தினால் இந்தப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கின்ற கருத்துக்களில் உண்மைகள் இருப்பதாக தெரியவில்லை.
அரசியல் நோக்கம்
கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பெரும்பாலும் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட பலவற்றுக்கு அரசியல் தலைமையை வழங்கியுள்ள நிலையில், அவரது காலப் பகுதியில் அவ்வாறு நிதியை திருப்பி அனுப்பியதில்லை.இவ்வாறான நிலையில் ஆதாரமற்ற தகவலை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை வேதனையளிக்கின்றது.
தற்போதைய ஜே.வி.பி. அரசாங்கத்தினை பொறுத்தவரையில், கடந்த கால அரசாங்கங்களையும், அரச அதிகாரிகளையும் விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள். தற்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், தமது பலவீனங்களை மறைப்பதற்கு அதிகாரிகள் மீது குற்றஞ் சுமத்துகின்றனர்.
அரசாங்க அதிகாரிகளை மன உலைச்சலுக்கு உள்ளாக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாம் நிதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுக்களினால் விரக்தியுற்று எம்மத்தியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் வெளியேறிச் செல்வார்களாயின், ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு, வெளி மாகாணங்களில் இருந்து, எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத - எமது மக்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாதவர்களை நியமி்க்க வேண்டி ஏற்படும் அது எமக்கு ஆரோக்கியானதல்ல எற்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |