விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பீற்றர் இளஞ்செழியனுக்கு பிணை
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பீற்றர் இளஞ்செழியனை இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவரை 04-01-2022 வரைவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது. பின்னர் 04-01-2022 அன்று வழக்கு விசாரணைகளில் மீண்டும் இன்று வரை (18) விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று( 18) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பீற்றர் இளஞ்செழியன் சார்பில் மன்றில் ஆயரான சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.
இதனடிப்படையில் பீற்றர் இளஞ்செழியனை இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 24.05.2022 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தனியார் பேருந்து
வழித்தடம் ஒன்றை வழங்குவதற்காக மாவட்ட செயலக கடிதத் தலைப்பில் கடிதம் ஒன்று
அடிக்கப்பட்டு அதனூடாக குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஊடாக
பணப்பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆவண தயாரிப்பு
பணப்பரிமாற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுடனேயே பீற்றர் இளஞ்செழியன்
உட்பட மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.