வேட்டையாடப் பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த யானைக்குட்டி
வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த ஒரு வயது நிரம்பிய யானைக் குட்டியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் நீண்டநேர போராட்டத்தின் பின் வன அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு வடமுனை காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் நேற்று காயமடைந்த குறித்த யானைக் குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டாரவின் வழிகாட்டலில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்று வட்ட அதிகாரி நாகராஜ் சுரேஸ்குமார் தலைமையிலான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யானைக் குட்டிக்கு அம்பாறை மாவட்ட மிருக வைத்திய அதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய வசதிகளை செய்து அதனை அம்பாறை வனவள திணைக்களத்திற்கு எடுத்துச் சென்று முழுமையான சிகிச்சை வழங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.