அருவருக்கத்தக்க வார்த்தைகள்: இஸ்லாமிய சமய பாடநூல்களை திரும்ப பெற உத்தரவு
ஒரு நாடு- ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழு , பாடசாலை இஸ்லாமிய சமய பாட நூல்களில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளதை அடுத்து, கல்வி அமைச்சு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 6 ஆம்,7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கான இஸ்லாமிய சமய பாடநூல்களை திரும்ப பெற்றுள்ளது.
இதனடிப்படையில், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் கிடைத்துள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுக்கு இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாடநூல்களை திரும்ப பெறுமாறும் அவை திருத்தப்படும் வரை அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் எனவும் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் ஜீ.என். இலன்பெரும ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த இஸ்லாமிய சமய பாடநூல்களில் சில அருவருக்கத்தக்க வார்த்தைகள் அடங்கி இருப்பதாக ஜனாதிபதி செயலணிக்குழு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் என்பன நூல்களில் உள்ளடக்கத்தை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.