ஆவா குழு தொடர்பான பதாதைகளுடன் வவுனியாவில் 16 பேர் கைது (Photos)
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 16 பேர் ஆவா குழு தொடர்பான பதாதைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் 40இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் சிலர் தப்பியோடிய நிலையில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 'ஆவா குழு வவுனியா' என பெயரிட்ட பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், கூரிய ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 16 பேரும் ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கூரிய ஆயுதங்கள், பதாதைகள், கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதான இளைஞர்கள் வவுனியா - மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை மற்றும் முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
