சிறீதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(14.1.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான பயணங்களில் உள்ள இடைவெளிகள், பொறுப்புக் கூறல், நீதியை நிலை நாட்டுவதில் இன்றைய அரசும் அக்கறையுடன் செயற்படாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் காணிகள்
அத்தோடு, வடக்கு கிழக்கில் இன்றும் விடுவிக்கப்படாமல் இராணுவ வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகள், புத்த விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை விரிவு படுத்தும் அரசு நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் விரிவாக உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் தொழில் வாய்ப்புக்கள், முதலீடுகளை உருவாக்குதல் தொடர்பிலும் நிரந்தரமான நீடித்து நிலைக்கக்கூடிய கௌரவமான அரசியல் தீர்வை எட்டுவதில் சர்வதேச சமூகத்தின் பங்கும் அழுத்தமும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் சிறீதரன் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறினார்.