தனிமனித சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய அணுகுமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஜீவரெத்தினம் தவேஸ்வரன்
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் தனிமனிதனின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடியவாறு மேற்கொள்கின்ற அணுகுமுறைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,"தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பல்வேறு அர்ப்பணிப்புகளினால் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் இலக்குகளை யாராலும் மாற்றியமைக்க முடியாது.
தனிப்பட்டவர்களின் நலனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலக்குகளை மாற்றி அமைக்க முடியாது. அவ்வாறான கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவ்வாறான கருத்துக்கள் பொது இடங்களில் இனி மேலும் தெரிவிக்கப்படுமானால் நாங்கள் தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் வீதிக்கு இறங்கி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
அவசரகால நிலைமை
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அவசரகால நிலைமையை பயன்படுத்தி மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் வடக்கு கிழக்கிலும் முறையற்ற விதத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை காணக்ககூடியதாக இருக்கின்றது.
மேலும், என்னை விசாரிப்பதற்கு நான்கு பேர் அடங்கிய குழு எனது வீட்டிற்கு சென்று இருந்தனர். நான் இல்லாததன் காரணத்தினால் அந்த விசாரணையை பிறிதொரு நாளுக்கு வைத்துக்கொள்வதாக கூறி விட்டு சென்றிருக்கின்றார்கள்.
எது எவ்வாறாயினும் முன்னறிவித்தல் இன்றி தனி மனித உரிமைகளை மீறக்கூடியவாறு முறையற்ற விதத்தில் அணுகுவது என்பது வேதனை அளிக்கின்றது. ஏற்கனவே பல்வேறு மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் மூலம் சர்வதேச அரங்கில் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது.
இலங்கை தற்போது இருக்கின்ற நெருக்கடியான காலகட்டத்தில் சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்த்து இருக்கின்ற இந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் பல்வேறு மனித உரிமைகளை புரிந்து சர்வதேச ரீதியில் பல பின்னடைவுகளை ஏற்படுத்துகின்ற முயற்சியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறான சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களின் தனிமனிதனின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடியவாறு மேற்கொள்கின்ற அணுகுமுறைகள் உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். காரணம் இவ்வாறான நடைமுறைகளை எதிர்காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இவ்வாறான முன்னறிவித்தல் இன்றிய அச்சுறுத்தும் வகையிலான விசாரணைகள் நகர்வுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.