கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி - இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை இரணை மாதாநகர் இறங்குதுறையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியைத் தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாகச் சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகஜர்களும் அனுப்பி வைத்துள்ளனர்.



