ரணிலை சிறையில் அடைக்க முயற்சிப்பது அரசின் பலவீனம் என ஐ.தே.க. சாடல்
எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக தற்போதைய அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைத் திட்டத்தின் பிரதான இலக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படும் விசேட மக்கள் சந்திப்புகளின் முதற்கட்டம் இன்று (14.03.2026) காலை காலியில் ஆரம்பமானது.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டுக்காக ஆற்றிய சேவை
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய அரசு தனது கட்சித் தலைமையகத்தின் ஊடாக எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கில், ரணில் விக்ரமசிங்கவை நேரடியாகத் தாக்கி வருவதை அனைவரும் அறிவர். ஒரு தேசியத் தலைவராக அவர் நாட்டுக்காக ஆற்றிய சேவையை இன்று சிலர் மறந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டின் தொழில்முயற்சி மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அவரே. பியகம, சீதாவக்க, சப்புகஸ்கந்த, பிங்கிரிய, கொக்கல மற்றும் பல்லேகலை ஆகிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு அவரே முன்னோடியாகத் திகழ்ந்தார். 1991ஆம் ஆண்டிலேயே ஹோட்டல்களுக்கான சலுகைகளை வழங்கவும், 'இன்போ லங்கா' கண்காட்சியைத் தொடங்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
2001ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து மறைப் பெறுமானத்தில் இருந்தபோது, அதனை மீண்டும் கட்டியெழுப்பியவர் ரணில் விக்ரமசிங்கவே. 2003 இல் டோக்கியோ உதவி மாநாட்டின் ஊடாக 'மீண்டெழும் ஸ்ரீலங்கா' திட்டத்துக்காக சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயைப் பெற்றுத் தந்தார். அன்று நாடெங்கும் நிலவிய மின்வெட்டை முழுமையாக நீக்கி, 24 மணிநேர மின்சாரத்தை உறுதிப்படுத்தியதும் அவரது அரசே ஆகும்.
அரசியல் நெருக்கடி
2022 முதல் 2024 வரையான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தபோது, எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பொருள்களுக்காக மக்கள் வரிசைகளில் உயிரிழந்த இருண்ட காலத்தை மாற்றியமைத்தவர் அவரே. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி, வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்ததோடு, நிச்சயமற்றிருந்த மக்கள் வாழ்வை இயல்பு நிலைக்கும் அவர் கொண்டு வந்தார்.

இந்து சமுத்திர மாநாடுகளில் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் சர்வதேச அளவில் போற்றப்படுகின்றன. உலகத் தலைவர்களுடன் அவர் கொண்டுள்ள நெருக்கமான உறவு நாட்டுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை ஆற்றிய ஒரு தலைவரின் அறிவையும் அனுபவத்தையும் நாட்டுக்காகப் பயன்படுத்தாமல், அவரைச் சிறையிலடைக்க முயற்சிப்பது தற்போதைய ஆட்சியாளர்களின் பலவீனத்தையே காட்டுகின்றது என்றார்.
இந்தக் கூட்டத்தில் காலி மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். காலி மாவட்டத்தை முழுமையாக உள்ளடக்கும் வகையில் இன்று ஆரம்பமான இந்த விசேட சந்திப்பு நாளையும் தொடரும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam