ஓமந்தையில் விகாரை கட்டும் முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் ஓமந்தைப் பொலிஸார் அத்துமீறிச் சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி நேற்று(08) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அந்தப் பகுதியில் கூடியவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஓமந்தையின் ஏ - 9 வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் தனியார் உரிமை கோரி வரும் அரச காணி ஒன்றைப் பொலிஸார் துப்புரவு செய்து அதைச் சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களால் நிறுத்தப்பட்டதோடு விகாரை அமைக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணி தொடர்பில் கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதைப் பொலிஸார் அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அகற்றப்பட்ட பொலிஸார்
இந்நிலையில், ஓமந்தைப் பொலிஸாருக்கு அந்த அரச காணியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனப் பிரதேச செயலாளரால் எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், பொலிஸார் அந்தக் காணியைச் சுத்தம் செய்து அதனைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, அங்கு கூடிய வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் தவிசாளர் பி. பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.சஞ்சுதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் உட்பட் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு குறித்த காணிக்குள் பிரவேசித்து அங்கிருந்த பொலிஸாரையும் அகற்றினர்.
வேலி இடும் பணிகள்
இதையடுத்து பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.
இதன்போது, பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த காணியில் விகாரை அமைக்கும் திட்டம் இல்லை எனவும், தமது கட்டுப்பாட்டில் 2009ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணி காணப்படுகின்றது எனவும், அதைத் தமது மைதான தேவைக்காகவே புனரமைப்பதாகவும், எவ்விதமான கட்டடங்களும் கட்டப்படாது எனவும் தெரிவித்ததை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
எனினும், அந்தக் காணியைப் பொலிஸார் அபகரிப்பதற்கு விட முடியாது எனவும், அவ்வாறு அபகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும், காணிக்கு வேலி இடும் பணிகள் தொடர்ந்தும் தற்போதும் நடைபெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


