கிளிநொச்சியில் இ.போ.ச சாரதி, நடத்துநர் மீது தாக்குதல் - பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று (09) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர் இ.போ.சபை பேருந்தின் நடத்துநர் மற்றும் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி சாலைக்குச் சொந்தமான இ.போ.சபை பேருந்து கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.
குறித்த பேருந்து பயணத்தினை ஆரம்பித்த அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது. இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் கரடிபோக்கு பகுதியினை இ.போ.சபை பேருந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர் இ.போ.சபை பேருந்தின் நடத்துநர், சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளாகிய இ.போ.சபை சாரதி மற்றும் நடத்துநர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.









