வவுணதீவு பொலிஸ் மீது தாக்குதல்; 6 பெண்கள் உட்பட 12 பேருக்கு விளக்கமறியல்
வவுணதீவு பொலிஸ் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஊத்துமடு - பாவக்கொடிசேனைப் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வீடு ஒன்றை முற்றுகையிட்டு மதுபான வியாபாரியை கைது செய்ய முற்பட்டபோது அங்கிருந்த குழு ஒன்று பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதேவேளை குறித்த சந்ததர்ப்பத்தில் பொலிஸ் வாகனமும் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6 பெண்கள் உட்பட 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்திருந்தார்.
வவுணதீவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று முற்பகல் 11 மணியளவில் குறித்த வீட்டை முற்றுகையிட்டு அங்கு சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை 2 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்தனர்.
தாக்கப்பட்ட பொலிஸார்
கைதான இளைஞரை ஜீப் வாகனத்தில் ஏற்றுவதற்குப் பொலிஸார் முற்பட்டபோது குறித்த இளைஞரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் அடங்கிய குழுவினர் அவரை ஜீப் வாகனத்தில் ஏற்றவிடாது பொலிஸாரைத் தடுத்துள்ளனர்.
இதையடுத்துப் பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே இழுபறி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவரைப் பொலிஸார் சுற்றிவளைத்து மீண்டும் பிடித்துள்ளனர்.
கைதான இளைஞர் ஜீப் வாகனத்தில் ஏற்றப்பட்டதையடுத்து பொலிஸார் மீது இளைஞரின் உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததுடன் ஜீப் வாகனத்தின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாரின் ஜீப் வாகனத்தை உடைத்துச் சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஏற்கனவே சட்டவிரோத மதுபானம் கடத்தல் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.